வார்த்தை விளையாட்டு





தேர்ந்த கதைசொல்லியான நீ வரலாறெழுதத் திட்டமிடுகிறாய்
நான்காயிரம் வருடமாய் ஆற்றங்கரையில் புதைந்திருந்த எருது
குதிரையாக மாறி கனைக்கத் தொடங்குகிறது
நீயெழுதும் அந்த எருதைப் பற்றிய ஆவணக் குறிப்புகளுக்கு
வெள்ளைக் குதிரையின் கதை எனப் பெயரிடுகிறாய்
எம திசையில் பிணமெரிக்கும் நாகார்ஜுனனை
புத்தனென்றே விளிக்கிறாய்
தியான புத்தனின் பின்னால் சுவரில் பதியும்
நிழலை விநாயகனென்று வழிபடுகிறாய்
வார்த்தையென்பது ஒரு கண்ணாமூச்சி
உனது வார்த்தையை வேடிக்கை பார்க்க வந்த என்னையும்
சொல் விளையாட்டில் சேர்த்துக்கொள்கிறாய்
மொழியின் பொருண்மை வெளியில் ஆட்டம் தொடங்குகிறது
தூய்மை விரும்பியான நீ பூனைக்குட்டியாக
மாறி ஒளிந்துகொள்கிறாய்
நான் கொழுத்த பன்றியாகி வார்த்தைகளைக் கிளறுகையில்
மல வாடை வீசுவதாய் முகம் சுழிக்கிறாய்
சினந்த இராணுவ வீரனின் தொனியில்
எனக்கும் நீயே பெயரிடுவதாகக் கூறி
என்னை ஒளிந்துகொள்ளச் சொல்கிறாய்
பிடிமானமற்று சரியும் வார்த்தைகளின் வெளியில்
பதுங்கு குழி தேடிக் களைத்துப் போகிறேன்
நான் மூச்சு வாங்கும் கணத்தில் நீ கொழுத்த பூனையாக மாறி
முட்டுச் சுவரில் எழுதத் தொடங்குகிறாய்
என் பெயரை சுண்டெலியென

                                                    நன்றி: புது எழுத்து ( ஜனவரி 2012 )

No comments: