போதையைக் கொண்டாடும் பித்தனின் குறிப்புகள்

     பாரதியின் பாடல் பெற்ற தலமான சித்தானந்த சுவாமி கோவிலுக்குச் சற்று தள்ளி சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறையிருக்கும் சுடுகாட்டுக்கு எதிரே கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்திலிருக்கும் சாராயக்கடைக்கு ரமேஷ் பிரேதனுடன் போவதுண்டு. [சாராயம் அருந்துவதில்லையென்றாலும் சாராயக் கடைகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு சிற்பங்களை ரசிப்பதற்காகவே கோவிலுக்குச் செல்வதுபோல]. மதில்களில் விளையாடும் குரங்குக் குட்டிகளும் காலடியில் உரசிச் செல்லும் பன்றிகளும் பத்தடி தூரத்தில் வெட்ட வெளியில் மலம் கழிக்கும் ஆடவருமென அவ்விடத்தின் வாழ்க்கை நியதிகளே தனியானதாயிருக்கும். இருப்பதற்கு நிலமும் செரிப்பதற்கு உணவுமில்லாத அதுபற்றிய கவலை சிறிதுமில்லாத உடல்களை அங்கே காணமுடியும். ஒவ்வொருமுறையும் இரண்டு ரூபாய் பணத்திற்காகவோ  உண்ணும் மரவள்ளிக்கிழங்கிலாவது மணிலாக் கொட்டையிலாவது பங்கு கேட்பதற்காகவோ எவரேனும் அந்நியர் வந்து நிற்பார். நம்மைக் கவனிக்க வைக்க அவர் செய்யும் பாவனைகளில் ஓரங்க நாடகத்தின் அத்தனை நுணுக்கங்களுமிருக்கும்.
         
     சாராயக் கடை என்பது தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட ஊரின் மிக விசாலமான கூரையைக் கொண்ட குடிசை. வண்ண வண்ண சீரியல் விளக்குகளாலும் பச்சைக் குழல் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கும் அவ்விடத்தில் பழைய தத்துவப் பாடல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். எப்பொழுதேனும் பெரும்போதையில் நாவறண்டு முனகும் எவனுக்கேனும் பெயர் தெரியாத கர்ணனொருவன் தன் சோடா பாட்டிலின் பானத்தைத் தாரைவார்த்துக் கொண்டிருப்பான். கவிதைகளை வாசிப்பதில் கிடைக்கிற அலாதியான கணங்களைச் சாராயக் கடையின் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கும் தருணங்களில் எட்டிவிட முடியுமென்று தோன்றுகிறது. மது விடுதிகள் பெருகிவிட்ட நிலையில் காலத்திற்கேற்ப சாராயக் கடைகள் புதுப்பிக்கப் பட்டாலும் கூட ஓடுகள் வேயப்பட்ட கூரை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி முதலான சிலவற்றைத் தவிர அப்படியொன்றும் பெரிதாய் மாற்றமில்லை.
         
     வில்லியனூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வடக்கு பார்த்திருக்கும் சாராயக்கடையில் சொற்ப நாணயங்களுடன் உள்நுழைந்து சாராயத்தை ரமேசும் ரத்தப் பொறியலை நானும் உட்கொண்ட கவித்துவமான தருணம் சாராயக்கடை என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஒவ்வொரு கணத்திலும் நினைவுக்கு வருகிறது. மேட்டுப்பாளயத்திலிருந்து உழவர்கரை செல்லும் குறுக்குச் சாலையில் கிழக்கு பார்த்திருக்கும் சாராயக்கடையில் ஒருமுறை ரமேஷ் ஒரு பெண்ணைக் காட்டினார். அப்பொழுது மணி இரவு எட்டு முப்பது. குளித்து வெகுநாட்களான எண்ணெய் பார்க்காத செம்பட்டைத் தலையுடன் துப்பட்டா இல்லாத பச்சைச் சுடிதார் அணிந்திருந்த அவளுக்கு மிஞ்சிப்போனால் பதினைந்து வயதிருக்கலாம். இருபதடி உயரத்து மரமேடையில் கடைக்கு வெளியில் வரை வழிந்தோடும் அதீத ஓசையுடன் இயங்கிக் கொண்டிருந்த வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியில் கண்புதைத்து மோன நிலை எய்தியிருந்தாள். ரமேஷ் கேட்டார் "இவளது இன்றைய இரவு எப்படிக் கழியும்? உனது புனைவு வெளியை அவள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து தொடங்கி விரிக்க முடியுமா?". ரமேஷ் பிரேதனின் சாராயக்கடை குறித்த வாசிப்பிற்கான முன்தயாரிப்புகளை இந்தப் புள்ளியிலிருந்து குறிப்பெடுத்துக் கொள்வது உசிதமாயிருக்குமென்று நம்புகிறேன்.
         
     மேலோட்டமாகப் பார்க்கையில் ஃபான்சியான பொதுப்புத்தியை அதிர்ச்சி மதிப்பின் மூலம் கவரும் தன்மை கொண்ட சாராயக்கடை என்ற தலைப்பு ஆழ்ந்து வாசிக்கையில் புதுச்சேரியின் வரலாற்றை உட்கொண்டிருக்கிற நிலவியலை உட்கொண்டிருக்கிற அரசியல் சொல்லாடலாக விரிந்து விடுகிறது. ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கப்பட்டவர்களை மறக்கப்பட்டவர்களை நினைவுக்குக் கொண்டு வரும் வார்த்தையாக சாரயக்கடை அமைந்து விடுகிறது (எ.கா. சாராயக் கடை - நெம்பர் 18- வில்லியனூர் கொம்யூன்). மேட்டுக் குடியின் பாசிச மனோநிலைக்கு எதிராகப் புறக்கணிக்கப்பட்டவனின் வன்மத்தோடு ஒலிக்கும் குரலாக இதனை வாசிக்க முடியும்.
         
   தன் பூர்வ அடையாளங்களுடன் ஆடையற்றுத் திரிகிற ஆதிக் குடிகளாயினும் சரி பின் நவீன சூழலின் அத்தனை வன்மங்களுக்கும் ஆட்பட்டுள்ள ஓர் தேசிய இனமாயினும் சரி போதை இல்லாத சமூகம் என்று எதுவுமே உலகில் இல்லை. ஒவ்வோர் இனமும் தத்தமக்கெனத் தோதுப்படுகிற போதை வஸ்துக்களை உருவாக்கிக்கொள்கிறது. நம் சங்க இலக்கியத்தில் ஆடவரும் பெண்டிரும் அரசனோடு சேர்ந்து மதுவருந்திய நிகழ்வை ஒளவ்வையின் பாடல் தெரிவிக்கிறது.
         
     ஆனால் இன்றோ மதுவிலக்கின் மூலம் பாசிச மனோநிலையின் வன்மம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ஒருவனுடய குடிப் பழக்கத்தின் உண்மை இன்மைகளை வைத்தே அவனது புனிதத் தன்மையும் குணத்தின் மேன்மையும் தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் அனைவருக்குமானதாகக் கொண்டாடப்பட்ட போதை எதிர்மனித, எதிர்சமூகச் செயல்பாடாக மாற்றப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைக் கேள்விக்குட்படுத்துகிறது இத்தொகுப்பு. கொஞ்சம் கொஞ்சமாய் இந்தப் புள்ளியிலிருந்து வழிந்து மனித குல வரலாற்றின் அடிமைத்தனங்களை வரையும் கோட்டுச்சித்திரமாக மாறிவிடுகிறது.

               ஒவ்வொரு நகர்வுக்கும் பொருளுண்டு
               ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையே
               அறம் ஓர் ஊறுகாய் மட்டை


என்று சொல்லி ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றையும் கொட்டிக் கவிழ்த்து விடுகிறது. மதுவகைகளிலே கூட வர்க்க பேதம் பாதுகாக்கப்பட்டு சாராயம் தீண்டத் தகாதவர்களின் பானமாகிவிட்ட நிலையில் சூரியன் சந்திரன் மழை என மேன்மையானவை கொண்டாடப் படுவது போல சாராயமும் (சாராயத்தின் மூலம் விளிம்புகளும்) கொண்டாடப்பட வேண்டியதன் தர்க்கக் காரணிகளை இது முன்வைக்கிறது (எ.கா. மாமது போற்றுதும்).
         
     அறிவுமனத்தின் தலையாய கண்டுபிடிப்பு என சக உடலை ஒடுக்குதலும் கண்காணித்தலுமான அரசியலைத் தான் சொல்லமுடியுமென்று தோன்றுகிறது. அதற்கெதிரான கலகமாகத் தீவிர அறிவுமறுப்பை நிகழ்த்திப் பார்க்கும் இத்தொகுப்பு இதுவரை அறம் என்று சொல்லப்பட்டு வந்த பெருங்கதையாடலுக்கெதிரான வன்மத்தைக் கையாள்கிறது (எ.கா. கோவலன் புலம்பித் தீர்த்த காதை). மனித குல வரலாற்றில் இதுவரை உடலை ஒடுக்கியும் கண்காணித்தும் வந்த மொழியைக் கொண்டே போதையின் மூலம் கலவியின் மூலம் பைத்தியத்தன்மையின் மூலம் பலவிதமான மரணங்களின் மூலம் கட்டற்ற வெளிக்குள் உடலை இயக்கும் அரசியலை இது நிகழ்த்துகிறது. அறிவு மறுப்பென்பது அறிவிலி மனத்தின் செயல்பாடல்ல; அது அதீத அறிவின்பாற்பட்டது பேச்சின் உச்சம் மௌனம் என்பதைப்போல.
         
  அகவலி சார்ந்ததும் இயக்கம் சார்ந்ததுமான சுயபுலம்பல்களை கோஷங்களை புகார்களைக் கொண்டிருந்த தமிழ்க் கவிதைகளை வாசிப்பில் பன்மைத்துவம் கொண்டதும் கதைகளின் வெளியை அடைத்துக் கொண்டதுமான இன்றைய கவிதைகளின் தளத்திற்கு அழைத்து வந்ததில் ரமேஷுக்கும் பிரேமுக்கும் பெரும்பங்கு உண்டு. ஒரு வாசிப்பில் பான்டசியாகவும் அடுத்த வாசிப்பில் தீவிர அரசியலைப் பேசுவதுமான கவிதைகள் அவர்களின் தொகுப்புகளில் பெரும்பான்மையான இடத்தை அடைத்துக் கொண்டுள்ளன. ரமேஷ் பிரேதனின் சாராயக் கடையிலும் இத்தகைய கவிதைகளை அடையாளம் காணமுடியும் (எ.கா. தாதா பீட்டர் சிவம்).
         
    நீரில் நனைந்த பறவை தன் உடல் சிலிர்க்க உதறிக்கொள்வது போல வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் அந்தரங்கத் தன்மையை உதிர்த்துவிட்டு சித்த மருத்துவனின் கைவண்ணத்தில் செய்த மூலிகைகளாலான குழல்மாத்திரையாகச் சுருங்கி விடும்பொழுது கவித்துவத்தை உடுத்திக்கொள்கிறது மொழி. மொழியின் அத்தகைய சாத்தியப்பாட்டைப் பல தொனிகளில் பல வடிவங்களில் பல சொல்முறைகளில் நிகழ்த்திப் பார்க்கிறது இத்தொகுப்பு. சாக்லெட் நகரம், சாராயக் கடை - நெம்பர் 13 - உழவர்கரை கொம்யூன், நடைப்பயிற்சி, மாமது போற்றுதும், என் மகளின் அம்மாவுக்கு முதலான கவிதைகளை ஒரே வாசிப்பில் படித்து முடிக்கையில் இதனை உணர முடியும். பீர் பாட்டில் முதலான கவிதைகள் மாறுபட்ட ஒப்பீடுகள் மூலம் வாசக மனதில் பல புதிய திறப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. இளங்கோவடிகள், புதுமைப்பித்தன் என வேறு சிலரின் பிரதிகளை ஞாபகப்படுத்துவதன் மூலம் எழுத்துக்கு வெளியே தன் பிரதிகளை எழுதிச் செல்கிற கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு (எ.கா. கோவலன் புலம்பித் தீர்த்த காதை, சாத்தானும் கந்தசாமியும்).
         
         இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் முதல் நாவற்கொம்பு வரை வெளிவந்த ரமேஷ் பிரேமின் கவிதைகளில் நிலவியல் சார்ந்த அடையாளங்கள் வெகு சொற்பமே. (பொதுவாகவே நவீன தமிழ்க் கவிதைகள் நிலவியல் சார்ந்து எழுதப் படுவதல்ல என்ற முடிவுக்கும் வர இடமுண்டு). குருவிக்காரச் சீமாட்டி பரதேசி தொகுப்புகள் தவிர்த்த வேறெந்தப் புனைவுகளிளும்கூட இத்தகைய அடையாளங்களைக் காண்பதரிது. ஆனால் சாராயக்கடை தொகுப்பு பாண்டிச்சேரியின் கடல் காற்றும் சாராய வாடையும் வீசும் நிலவியலை வரைந்து காட்டுகிறது. தொகுப்பின் முதல் கவிதை புதுச்சேரியின் வெள்ளை நகரத்தில் தொடங்கி கடைசிக் கவிதையில் பூர்வ புதுச்சேரியான அரிக்கமேட்டை ஒட்டிய வீராம்பட்டினம் கிராமத்தில் முடிகிறது. வெள்ளை நகரத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் வெள்ளை நகரத்தின் சாயலில் மாறிக் கொண்டிருக்கிற பின்காலனியச் சூழலின் வன்மத்திலிருந்து மீண்டு பூர்வ அடயாளங்களுக்குள் செல்ல வேண்டிய எத்தனிப்பைப் பேகிற கவிதைகளாக இவற்றை வாசிக்க முடியும்.
 
   சர்ரியலிசம் தொடங்கி பின் நவீனத்துவம் வரை நிகழ்ந்த நீண்ட உரையாடலை ஞாபகப்படுத்திக் கொண்டும் இந்தக் கவிதைகளை வாசிக்கலாம். எந்த முந்தயாரிப்புகளும் செய்துகொள்ளாமலும் இவற்றை வாசிக்கலாம். ஆழ்மனத்தின் எண்ண ஓட்டங்களைத் தணிக்கை இல்லாமல் வெளித்தள்ளும்போது எதிர்கொள்கிற அதிர்ச்சியை இக்கவிதைகளின் வாசிப்பிலும் எதிர்கொள்ள நேர்ந்துவிடுகிறது.

நன்றி: புதுப்புனல், கீற்று.

ரமேஷ்-பிரேம் கதைகள் - வரலாறுகளின் சதுரங்கப் பலகை

"எழுது. எல்லாவற்றையும் எழுது. கதையாக எழுது. ஆய்வுரையாக எழுதி விடாதே. அதிகாரத்தின் கண்காணிப்பில் நீ இருக்கிறாய்.. அணுசக்தி மட்டுமே மனிதரை அதிமனிதர் ஆக்கக்கூடியது. நாம் அதற்கு எதிரானவர்கள். நம்மைக் கொல்ல இந்த உலகின் எல்லா நாடுகளின் அரசுக்கும் உரிமையுள்ளது. நாம் புனைவுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். எல்லாம் புனைவுதான். கடவுளைப் போலவே விஞ்ஞானமும் புனைவுதான்."
[குருவிக்காரச் சீமாட்டி, பக். 101 - 102].
 
 
          மிழகத்தின் கிழக்குக் கடலில் காற்றில் குமையும் பிணவாடை மட்டுமே எஞ்சியிருக்கிற ஈழத்துச் சூழலின் தீவிரம் யாரையும் எதுவும் செய்துவிடப் போவதில்லையென்பது யதார்த்தமாகியிருக்கிறது. கால்களுக்குக் கீழே பூமி பத்திரமாயிருக்கிறதாவென ஒவ்வொரு கணமும் சரிபார்த்துக் கொள்கிறேன். எந்த நிமிடமும் என் காலடி நிலம் பிய்த்து வீசப்படலாம் என்கிற அச்சம் மனதை உறையவைக்கிறது. வரலாற்றின் தீராத பக்கங்களில் ஒவ்வொரு விபத்தும் திட்டமிட்டே நிகழ்த்தப் படுகிறது என்கிற பேருண்மை எந்த நேரத்திலும் இரத்த நாளத்தை வெடிக்கச் செய்வதான மரண பயத்தைத் தருகிறது. இந்தப் பரந்துபட்ட உலகில் சொந்தமாக ஒருபிடி மண்கூட இல்லாததைக் கவனப்படுத்தியபடியே அகதிகளின் கதையை நாடோடிகளின் கதையை விளிம்புகளின் கதையைப் பேசும் ரமேஷ்-பிரேமின் பேரினவாத எதிர்ப்புப் பிரதிகளை இத்தகைய கனத்த மனதோடுதான் வாசிக்க நேர்கிறது.
  
          தையல் காரனைப் போலவோ மளிகைக்கடைக் காரனைப் போலவோ என்னிடம் எந்த அளவுகோலுமில்லை. ரமேஷ்-பிரேமின் பிரதிகளை மதிப்பிடுவதான அல்லது இலக்கிய வரலாற்றில் அவற்றின் இருப்பு குறித்ததான நுட்பங்களுக்குள்ளும் நான் போகவில்லை.. ஏறத்தாழ இருபது வருடங்களில் ரமேஷ்-பிரேம் எழுதிய முப்பத்தைந்து கதைகள் குறித்த வாசிப்பனுபவத்தினூடாகச் சக வாசகனுக்கான சில முன்தயாரிப்புகளைத் தருவது என்பதனடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப் படுகிறது.
  
          வாசிப்பில் கிடைக்கும் இன்பத்தினூடே அரசியலையும் பொதிந்து வைத்திருக்கிற ரமேஷ்-பிரேமின் பிரதிகளில் பெரும்பாலானவை வாசகனுக்கான கோப்பைகளை மட்டுமே தயாரித்துத் தருகின்றன. அவற்றில் மதுவை ஊற்றிக் கொள்வதோ மருந்தை ஊற்றிக் கொள்வதோ வாசகனின் பிரதியனுபவத்தில்தான் இருக்கிறது. இவ்வகையில் 'பன்றி' கதை மிகுந்த கவனத்திற்குரியது. ஆதித்தாயின்  சாயலில் சாலையோரத்தில் குட்டிகளோடு படுத்திருக்கும் பருத்த பெண்பன்றி நவீன வாகனமான லாரி ஏறி இறந்து விடுவதான இந்தக் கதை சமூகத்தில் பன்றியின் பல்விதமான இருப்புகளை முன்வைக்கிறது. இக்கதையை வெறும் பன்றியைப் பற்றிய கதையாகவும் வாசித்துக் கொள்ளலாம். பெண்களுக்கெதிரான, தலித்துகளுக்கெதிரான, கருப்பர்களுக்கெதிரான, எந்தவொரு விளிம்புக்கும் எதிரான வன்மத்தைப் பேசும் பிரதியாகவும் வாசித்துக் கொள்ளலாம். ஆதிக் குடிகளை நிர்மூலமாக்கும் அதிகார வர்க்கத்தின் அழித்தொழிப்பை கவனப்பத்தும் கதையாகவும் இதனை வாசித்துக் கொள்ளலாம்.
  
          பொதுவாகவே ரமேஷ்-பிரேமின் கதைகள் வாசகனின் வரலாற்றறிவையும் அரசியலறிவையும் ஒருசேர எதிர்பார்க்கின்றன. இவை குறித்த கூடுதல் எதிர்பார்ப்பினால் முதலிரண்டு தொகுப்புகளும் வாசகனை ஒருவித மிரட்சிக்குள்ளாக்கவும் செய்கின்றன. அதே சமயம் வாசக மனதின் அறிதல் திறனுக்குத் தக்கவாறு வேறுவேறு விதமான புளகாங்கிதங்களையும் உடைப்புகளையும் இக்கதைகள் ஏற்படுத்துகின்றன.
  
          வரலாற்றுப் பிரதிகளைச் சிதைப்பாக்கம் செய்வதன் மூலம் வரலாற்றின் அரசியல் பின்புலங்களையும் மறைக்கப்பட்ட பக்கங்களையும் ஊடுபிரதியாகக் கொண்டியங்குகின்றன ரமேஷ்-பிரேமின் கதைகள். சகமனிதனை அடித்துவிரட்டுவதும் அழித்தொழிப்பதுமாகவே நீளும் வரலாறு பேரினவாதத்தின் பாசிச மனோபாவத்தோடும் மனிதகுல விரோதியொருவனின் வன்மத்தோடும்தான் செயல்படுகிறது. எதிரியின் உடைவாளைக்கொண்டே எதிரியை வீழ்த்துவது போல இக்கதைகள் வரலாற்றுப் பிரதிகளின் புனைவுத் தன்மையைக் கொண்டே வரலாற்றின் பாசிச மனோநிலைக்கெதிரான கலகத்தை நிகழ்த்துகின்றன. 'இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள்' பிரதியை அதிலும் குறிப்பாக மைதூனா நாகரீகம் குறித்த பகுதியை இவ்விடத்தில் வாசித்துக் கொள்ளலாம்.
  
          விளிம்புகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த கவனமே இக்கதைகளின் மையநீரேட்டமாக ஒடுகிறது. 'பிரம்மனின் உடலுக்கு வெளியே', 'காலவட்டத்திற்குள் இரண்டு கண்கள்' முதலான கதைகளைத் தலித் அரசியலைப் பேசும் கதைகளாக அடையாளம் காணமுடியும். 'பொம்மை-குழந்தை' கதை பைத்தியங்களைப் பேசுவதோடல்லாமல் தெருவோரங்களில் வீசப்படும் குழந்தைகளையும் கவனத்திற்குள் கொண்டுவருகிறது. விளிம்பிலிருப்பவற்றைப் பேசுவது என்பதைத் தாண்டி மையத்தை நிறைத்துக்கொண்டிருந்த குடிகள் விளிம்பிற்குப் பிதுக்கியெறியப் பட்டது பற்றிய கவலையே ரமேஷ்-பிரேமின் கதைகளில் அதிகம் வெளிப்படுகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் புதுச்சேரி முழுவதையும் ஆக்கிரமித்திருந்த பன்றிகளை அதிகார வர்க்கம் அழித்தொழித்தது பற்றிக் கூறும் 'பன்றி' கதை இத்தகைய அரசியலைப் பேசுவதே. இவர்களின் கதைகள் பூர்வ குடிகள் அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றையும், அகதிகளின் அவலங்களையும் ஊடுபிரதியாகக் கொண்டியங்குகின்றன.
  
          ஆதி மனோநிலைக்கும் நவீன மனோநிலைக்கும் இடையிலான முரண்களினூடாக நகர்ந்து அறிவியலின் வன்முறையை அழித்தொழிப்பின் வன்முறையைப் பேசும் கதைகளாக இவற்றை வாசிக்க இயலும். விஞ்ஞானத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி ஆதி மனோநிலைக்குத் திரும்புவதன் மூலம் இயற்கையோடு கலப்பதே இக்கதைகளின் எத்தனிப்பாக உள்ளது. இந்த எத்தனிப்பு இயல்பாகவே சூழலியல் குறித்த கவனமாகவும் விரிந்து விடுகிறது. 'முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன', 'நத்தைக் கதை' முதலானவற்றில் அணுசக்தியின் பேரழிவுகளைப் பேசுவதும், ஆதித் தாய் பற்றிய குறிப்புகளில் அவள் பச்சை நிறத்தவளாயிருப்பதும் (எ.கா. ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம், பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை) இந்த வகையில் கவனம் பெறுகின்றன.
  
          அறிவு அதிகாரத்தைக் கட்டமைக்கிறது. அதிகாரம் பேரினவாதத்திற்குத் துணைபோகிறது. பேரினவாதம் தனது ஒற்றை அதிகாரத்தின் மூலம் விளிம்புகளை மறக்கடித்து விடுகிறது. இத்தகைய மறக்கடிப்பு அரசியலுக்கு எதிரான கலகத்தை நிகழ்த்தும் பிரதிகளாக ரமேஷ்-பிரேமின் கதைகளை வாசித்துக்கொள்ள முடியும். தன் வீட்டிலேயே வளர்ந்த பூனையை வீட்டுக்காரன் அடித்துத் தின்றுவிட்டுக் குறவன் தூக்கிப் போயிருக்கலாமெனக் கதைகட்டும் 'தொடர் மழைக் காலம்' கதை பேரினவாதமும் ஊடகமும் இணைந்து நிகழ்தும் மறக்கடிப்பு அரசியலைப் பேசும் குறியீட்டுக் கதையாக விரிகிறது. காலனியாதிக்கத்தின் அரசியலைப் புனைவினூடாக வெளிப்படுத்துவது (ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம்), நவீன பேரரசுகளின் ஏகாதிபத்திய வன்மத்தால் அழித்தொழிக்கப் பட்டவர்களைப் பட்டியலிட்டு அதன் அரசியல் பின்னணிகளைத் தெளிவு படுத்துவது (மூளையின் ஏழு அடுக்குகள் பற்றி அல்லது ஊன் உண்ணிகளின் கனவுகள் பற்றி) ஆகியவற்றின் மூலம் இவர்களின் பிரதிகள் பேரினவாதத்தின் முகமூடியைக் கிழித்தெறிகின்றன.
  
          நம் கண்ணெதிரே நிகழ்த்தப்பட்ட ஈழத்துப் பேரினவாதத்தின் வன்முறையை ரமேஷ்-பிரேம் தங்கள் கவிதைகளில் போலவே கதைகளிலும் தொடர்ந்து பேசிவந்துள்ளதை இப்பிரதிகளில் உணரமுடிகிறது. அகதி முகாம்களின் அவலத்தைப் பேசும் 'பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை' கதையும் யாழ்ப்பானத்துத் தெருக்களில் நிகழ்த்தப்பட்ட பேரழிவையும் அந்தப் போரின் தொடர்ச்சி கடல்கடந்து நம்மிடம் வர வெகுநாட்களில்லை என்னும் அபாய அறிவிப்பையும் வெளிப்படுத்தும் 'கோடைப்பகல் தூக்கம்' கதையும் இங்கு கவனம் கொள்ளத்தக்கன. 'முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன' கதையில் உலகின் எந்தப் பேரினவாதத்தின் பேரழிவுடனும் பொருத்திப் பார்க்க முடியுமெனினும் அதன் மங்கலான நிலவியல் சித்திரம் அதைத் தமிழீழ விடுதலையை எதிர்நோக்கும் பிரதியாக வாசிக்கும் மனோநிலைக்கு உட்படுத்திவிடுகிறது.
  
          பேரினவாதத்திற்கெதிரான கலகப் பிரதிகளான ரமேஷ்-பிரேம் கதைகள் விளிம்புநிலையரசியலைப் பேசுபொருளாகக் கொண்டது போலவே வடிவ ரீதியிலும் உத்தி ரீதியிலும் கூட ஏகத்துவத்தை உடைத்துப் பன்மைத்துவத்தை உடுத்துக்கொள்கின்றன. நேர்கோட்டு வாசிப்பிற்கெதிராக வரிசை மாற்றி அடுக்கப்பட்ட இப்பிரதிகள் அர்த்தங்களைத் தொடர்ந்து ஒத்திப் போட்டுக்கொண்டே வருவதன் மூலம் மையமறுப்பு அரசியலை நிகழ்த்துகின்றன. வாசகனை முடிவை நோக்கி நெருங்க விடாமல் செய்வதன் மூலமே இவை அதிகாரத்திற்கெதிரான கலகத்தை நிகழ்த்துகின்றன. கால, இடப் பரிமாணங்களில் செங்குத்தாகவும் கிடைக்கோட்டு நிலையிலும் நகரும் இப்பிரதிகள் ஒருவித எண்கணித விளையாட்டை நிகழ்த்திக் காட்டுகின்றன. முதலிரண்டு தொகுப்புகளில் இத்தகைய எராளமான கதைகளைக் காணமுடியும். வரலாற்றின் கருப்புப் பக்கங்களின் கருதுகோள்களைக் கொண்டு புதிய புதிய தொன்மங்களைப் புனையும் இக்கதைகள் வரலாற்றுப் பிரதிகளின் உண்மைத் தன்மைக்கும் புனைவுத் தன்மைக்கும் இடையிலான மொழி விளையாட்டின் சதுரங்கப் பலகையாக விரிந்து விடுகின்றன.
  
          உலகின் ஒட்டுமொத்த அரசியலும் நிகழ்த்தப் படுவதற்கான களங்களாக உடலையும் மொழியையும் முன்னிறுத்தும் ரமேஷ்-பிரேம் கதைகள் தனது பூர்வ அடையாளங்களை மீட்டெடுக்க எத்தனிக்கும் இனங்களின் அடையாள அரசியலுக்கான கருவியாக மொழியை முன்மொழிகின்றன. உடல் ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிப்புக்கும் ஒடுக்குதலுக்கும் உட்படுத்தப்படுவது. அந்தக் கண்காணிப்பிலிருந்து தப்பித்துப் புனைவின் மூலம் உடலைப் பூரண விடுதலை பெற்றதாகக் கொண்டாட வைக்கும் உடலரசியலை நிகழ்த்திப் பார்க்கின்றன ரமேஷ்-பிரேம் கதைகள். கண்காணிப்புக்குட்பட்ட லிங்க மையப் புணர்ச்சியிலிருந்து விடுபட்டு ஆணோடு ஆண் புணர்தல், பெண்ணோடு பெண் புணர்தல், அலியின் போகம், ஆண் சிறுமியோடு போகம் கொள்ளுதல், பெண் சிறுவனோடு போகம் கொள்ளுதல், ஆண் பெண்மிருகத்தைப் புணர்தல், பெண் ஆண்மிருகத்தைப் புணர்தல், கூட்டுப் புணர்ச்சி, யாரும் யாரோடும் உறவு கொள்ளும் கட்டற்ற வெளிக்கு உடலை நகர்த்துதல் என உடலைப் பூரண விடுதலையுடைய ஒன்றாகக் கொண்டாடுகின்றன இக்கதைகள். அதிகார மையத்தின் கண்காணிப்பு அரசியலை உடலின் மூலமாக மீறும் கலக ஏற்பாடு இது.
  
          உடல் அரசியலைப் பேசும் ரமேஷ்-பிரேம் கதைகள் எல்லா அதிகாரத்திற்கும் மூலகாரணியாக அதிகாரத்தின் பேருருவாக இருப்பது ஆண்மையமே என்னும் புள்ளியிலிருந்து கிளைத்து லிங்க மையத்தை உடைத்துப் போடும் பாலரசியல் பேசும் கதைகளாகப் பரிணமிக்கின்றன. ஆதிச் சமூகம் பெண் தலைமைச் சமூகமாகவே இருந்ததை இக்கதைகள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன. ஆதி சக்தியிலிருந்தே மும்மூர்த்திகளும் பிறந்ததான தொன்மம் ஊடுபிரதியாகச் சொல்லப்படுகிறது. 'வியாசகுலம்' கதை லிங்க மையத்தை ஆட்டம் காணச் செய்து பெண்ணின் இருப்பு குறித்த உரையாடலை நிகழ்த்துகிறது. வைத்தியனொருவன் சிவனின் பெயரால் பிள்ளையில்லாத பெண்களுக்குத் தன் விந்தையே மருந்தாகச் செலுத்துவதைப் பேசும் அக்கதை 'பெண் என்பவள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் கொள்கலம் தானா? பிள்ளையில்லாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழவே முடியாதா?' என்னும் கேள்விகளை முன்வைக்கிறது. 'பிரம்மனின் உடலுக்கு வெளியே' கதையில் ஆண் கடவுளை வழிபடும் முப்புர ராசாக்களால் விரட்டியடிக்கப்பட்டு வெகு காலத்திற்குப் பிறகு தன் பூர்வ நிலத்திற்கு மீளும் தாழ்த்தப்பட்ட குடிகளுக்கு வழிபடுவதற்கெனப் பெண் கடவுள் காத்திருக்கிறது. 'குருவிக்காரச் சீமாட்டி' கதை ஆண்களை வெளியே நிறுத்தி பெண்களுக்கான கதை வெளியை உருவாக்குகிறது. 'இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள்' கதை பெண்ணிய அரசியலைப் பேசும் தொன்மங்களைப் புனைகிறது..
  
          ஆண் தன்மையுடைய பிரதிகள் மையத்துடன் இருக்கும். அதன் விரைப்பு முடிவை நோக்கிச் சுட்டியபடி இருக்கும்.. பெண் தன்மையுடைய பிரதிகளில் இறுக்கமிருக்கலாம். ஆனால் தளர்வுகள்- மையபடுத்தப் படாத பல புலன் சிலிர்ப்புகள்- கலைந்து கிடக்கும் பலவழிப் புழைகள்- விட்டு விட்டுத் தொடரும் அர்த்தத்தின் திருகு மாற்றங்கள் என விரிந்து கொண்டேயிருக்கும். (கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள். ப.90). ரமேஷ்-பிரேமின் கதைகளும் அக்கதைகளின் அரசியலும் இத்தகைய பெண் தன்மை கொண்டவையாகவே இயங்குகின்றன.
  
          ரமேஷ்-பிரேம் கதைகளை இரண்டாயிரத்திற்கு முன்பு எழுதப்பட்டவை, இரண்டாயிரத்திற்குப் பின்பு எழுதப்பட்டவை என்னும் இரண்டு பகுப்புகளுக்குள் வைத்துப் பார்க்க முடியமெனத் தோன்றுகிறது. இப்படியொரு கோட்டை வரைந்து கொள்கையில் இக்கதைகளின் பரிமாணங்களில் எற்பட்ட மாற்றங்களெனச் சிலவற்றை அனுமானிக்க முடியும். முந்தைய காலக் கதைகள் உலக வரலாறுகளையும் மேற்கத்திய சிந்தனைத் தொகுப்புகளையும் அதிகம் உட்கொண்டு இயங்கும் கதைகள். இட, காலப் பரிமாணங்களின் மங்கலான சித்திரத்தை மட்டுமே வரையும் இக்கதைகள் அந்தரத்தில் தொங்குவதான பாவனையை ஏற்படுத்துகின்றன. அதிகம் பாத்திரப் பெயர்களில்லாத நீண்ட வாக்கிய அமைப்புடன் எழுத்து வழக்கிலான உரையாடல்களைக் கொண்டியங்கும் கதைகளாக இவற்றை வரையறுத்துக் கொள்ளலாம். கால அடுக்குகளில் முன்னும் பின்னுமாக நகர்வதன் மூலம் வாசகனின் அதிகபட்ச கவனத்தைக் கோரும் கதைகளாக இவை இயங்குகின்றன. 'கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்' தொகுப்பை வாசகனின் அதீத பொறுமையை எதிர்நோக்கும் தொகுப்பாக அடையாளம் காணலாம்.
  
          இரண்டாயிரத்திற்குப் பிறகு வெளிவந்த கதைகளில் கூறுமுறையில் எளிமை கூடியிருக்கிறது. புதுவையின் நிலவியலை வரைந்து காட்டும் கதைகளாக இவற்றை வாசிக்கமுடியும். இட, காலப் பரிமாணங்களின் தெளிவான சித்திரத்தை இவற்றில் காணலாம். கடந்த இருநூறாண்டு கால எல்லைக்குட்பட்ட கதைகளாகவே இயங்கும் இவற்றில் எளிய வாக்கிய அமைப்பையும் பேச்சுவழக்கிலான உரையாடல்களையும் காணமுடியும். தலைப்பிடுவதில் கூட முந்தயகாலக் கதைகளுக்கும் பிற்காலக் கதைகளுக்குமிடையே மிகுந்த வித்தியாசத்தைக் காணமுடிகிறது. (எ.கா. மூளையின் ஏழு அடுக்குகள் பற்றி அல்லது ஊன் உண்ணிகளின் கனவுகள் பற்றி, பன்றி).
  
          ரமேஷ்-பிரேமின் கதைகளை ஒட்டுமொத்தமாகத் திரட்டிக் கொள்வோமெனில் விளிம்புகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்துப் பேசும் கதைகளெனவும் பூர்வ மையம் விளிம்புகளில் வழியவிடப்பட்டதின் வன்மத்தைப் பேசும் கதைகளெனவும் வரையறை செய்து கொள்ளலாம். எனினும் அர்த்தங்களை அடுத்த கணத்திற்கென ஒத்திபோடும் இப்பிரதிகளில் வாசக அனுபவத்தினூடாக முடிந்த ஒற்றை முடிவுக்கு வரமுடியுமெனத் தோன்றவில்லை. சக வாசகராகிய உங்களுக்கு இக்கதைகள் என்னுடைய வட்டத்திற்கு வெளியே வேறுவிதமான உடைப்புகளை ஏற்படுத்திவிடும் சாத்தியமிருக்கிறது. எனவே இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளாமல் தொடர் ஓட்டத்தின் முதல் ஓட்டக்காரனைப் போல இதன் தொடர்ச்சியை உங்கள் பொறுப்பில் விட்டு விடுகிறேன். எனக்குச் சார்பாகவோ எதிராகவோ சம்பந்தமில்லாமலோ எப்படி வேண்டுமானாலும் இதன் தொடர்ச்சியை நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
நன்றி: மணல் வீடு ( டிசம்பர் 2009)