தீர்க்கதரிசனம்

 

யாருமற்ற  இதுபோன்றதொரு இரவின் தனிமையில்
பத்து செண்டிமீட்டர் உயரமேயுள்ள
பூனைக் குட்டியொன்றைப் பரிசளித்தாய்
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்
வார்த்தைகள் ஏதுமில்லை அன்று
புகை படிந்த சாம்பல் நிறம் கொண்ட
அந்தப் பூனையின் 'மியாவ்வைத் தவிர

நான் குடிக்கும் பால் அதற்கென்றானது
என் தலையணை அது உறங்குவதற்கென்றானது
கட்டிலில் அவிழ்த்துப் போட்ட என் உடைகள்
அது மூத்திரமிடுவதற்கென்றானது
வாரத்தைகள் அற்ற என்
அறையின் தனிமையை நிறைத்த படியே
பெரும் பசியை அறிவித்துக் கொண்டிருந்தது 'மியாவ்'

பகல் பொழுதில்
கபாலத்திற்குள் ஓடி விளையாடுவதும்
படிக்கும் புத்தகத்தில் தாவிக் குதிப்பதுமென
என் காலத்தைப் புசித்துக் கொண்டிருந்தது பூனை

இன்றைய அந்தியில்
ஓரிரு முறை உன் போர்விமானம் கடந்தபின்
புகை படிந்து சாம்பல் நிறம் கொண்ட
என் தெருவின் சிதிலங்களூடே
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்
வார்த்தைகள் ஏதுமில்லை
'மியாவ்வும் கூட இல்லை

No comments: