தூண்டில் காரன் கதை




ஏதும் சொல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு
இணைமீனை வசியம் செய்யும்
வார்த்தைகளைச் சேகரித்தபடியே
மௌனமாய் நீந்துகிறது ஆண்மீன்

எதிர்வரும் பெண்மீன்
தான் ஆற்றை விழுங்குவது பற்றியும்
தன் வயிற்றில் பேராறு வளர்வது பற்றியும்
சொல்லியபடியே விழுங்கிவிடுகிறது ஆண்மீனை
குழந்தைமையின் குறும்புடன்
உள்வயிற்றின் பெருவெளியில்
நீந்தத் தொடங்குகிறது ஆண்மீன்

தன் துணையை விழுங்கும்
ஒவ்வொரு பெண்மீனுக்கும்
உதட்டில் ஊசி வடிவக் குழலும்
அடிவயிற்றில் ஆறு கால்களும் முளைக்க
வாடிக்கையாகி விடுகிறது
நதியின் எல்லை கடந்து பறப்பது

தக்கையாடும் தருணத்தை எதிர்நோக்கும்
தூண்டில்காரனுக்கு ஆற்று நீரில் மிச்சமிருப்பது
நீர்வெளியில் துள்ளும்
பெண்மீன் பட்டாம்பூச்சியாவது பற்றிய
கதைகள் மட்டுமே

நன்றி: உயிர் எழுத்து டிசம்பர் 2008
 

No comments: