புதைவெளி





கருடன் பார்த்து வெகு காலமாகிறது
எப்பொழுதேனும் வலசை போகின்றன நாரைகள்
கம்பிக் கதவினுள் பொமரேனியன் டாபர்மேன்
பேருந்துச் சக்கரத்தில் கவனிப்பாரற்று
எஞ்சிய தெருநாய்கள்


முயலும் காட்டுப் பூனையும் பிடித்து
விற்றுப் போன பழைய குறவன்
பிச்சை எடுக்கவேனும் வந்து போகிறான்
வேட்டைக்
குறவனைப்
பிச்சைக் காரனாக்கியது
வனமற்ற வனத்துறை

அவனது ஞாபகத்தில்
எமது திணை நிலத்தின் பச்சைய
வாசனை

தை முதல் நாள்
ஊர்க்கோயிலில் பொங்கலிட
பொறுக்கிய சுள்ளிகளின்
நெருப்பில் விரிகிறது
பழைய தோப்பு


பேருந்து நெரிசலில் சிக்கிய எனது
ஞாபகத்தின் கீழடுக்கில் நசுங்கும் 
பழைய கிராமதின் நில வரைபடத்தை
இறகுகளின் நிழல் விழாத
காய்ந்த இந்த நகருக்குள்
வாழ நேர்ந்துவிட்ட உன்னிடம்
எப்படிக் கையளிப்பது மகளே


நன்றி: உயிர் எழுத்து ஏப்ரல் 2012

No comments: